தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.
தென்காசி மிக அழகான ஊர். எங்கும் பச்சைப் பசுமை. தூரத்து வயல்கள், பசும் மலைகள். இந்த மேற்குத்தொடர்ச்சி மலைகளைத் தாண்டினால் கேரளாவாம்.
எங்கெங்கு நோக்கினும் அருவிகளில் குளியலாடச் செல்லும் மக்கள். ஜூலை, ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் இங்கே ஒரே கூட்டமும் போக்குவரத்து நெரிசலுமாக இருக்கிறது.
ஆடி வெள்ளியும் அதுவுமாக அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து இங்கே வருபவர்கள் அதிகம்.
உலகம்மன் காசி விசுவநாதர் ஆலயம் ஒன்பது நிலைகளுடன் மிகக் கம்பீரமாக நிற்கிறது. பதிநாலாம் நூற்றாண்டுக் கோயில் . அம்மனுக்கு, பெருமானுக்கு, சோமாஸ் ஸ்கந்தனுக்கு என்று தனித்தனிக் கோவில்களுடன் கூடிய கோவில். மிகப் பெரும் பிரகாரங்கள் கொண்ட பிரகாரங்கள்.
சாப்பாடு எல்லாம் சீப்தான். மீல்ஸ் 70. இட்லி தோசை எல்லாம் இருவருக்கு நூற்றைம்பது ரூபாய்க்குள் வரும். டீ 15 ரூ.
இந்த ஹோட்டல் சௌந்தர்யாவில் ஒன்லி போர்டிங்தான். மீல்ஸ் பஃபே எதுவும் கிடையாது. கேட்டால் ரூம் சர்வீஸில் சொல்லி வாங்கித் தருகிறார்கள்.
அமைதியான ஊர். ஒருவாரம் தங்கி ஒவ்வொரு அருவியாகக் குளிக்கலாம். மெயின் அருவியில் க்யூ, ஐந்தருவி பரவாயில்லை. ஆனால் வீட்டில் வெந்நீரில் குளியலாடியவர்களுக்கு ( அதாவது எனக்கு ) அங்கே அருவியில் நிற்பது சுவாசத்தை நிறுத்தி மூச்சுத் திணறியது.
திருஞான சம்பந்தருக்கும் கோவில் உள்ளது. ஐந்தருவி செல்லும் வழியில் அமைந்த சித்திர சபை பார்த்தோம் அபாரம் !
குற்றாலம் இங்கிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த ஹோட்டல் மூன்றடுக்கு மாளிகை. வைஃபை, கார் பார்க்கிங், ரூம் சர்வீஸ், ஏசி, ஹாட்வாட்டர் அனைத்தும் உண்டு.